தப்பித்தார் எடியூரப்பா !! 11 தொகுதிகளில் பாஜக முன்னிலை… ஆட்சியைத் தக்க வைக்கிறார் !!
கர்நாடகத்தில் 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போது 11 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. இதையடுத்து எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறார்..
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு அளித்த ஆதரவை, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளைச் சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்களும் திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன்பிறகு, கர்நாடக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 17 இடங்களில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை சந்தித்து இருந்தது. இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.
இதில், பாஜக 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 2 இடங்களிலும், மஜத ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.
கர்நாடகத்தில் தற்போது பதவி வகிக்கும் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி தொடர கட்டாயம் 6 தொகுதிகளில், பாஜக வெற்றி பெறுவது அவசியம் ஆகும்.
தற்போது பாஜக 11 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்கிறார்.