"மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும்" - மீண்டும் மீண்டும் பிரதமரை வலியுறுத்தும் எடப்பாடி...!!!
இலங்கை சிறையில் உள்ள 60 மீனவர்களையும் 146 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வெண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 8-ம் தேதி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 53 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அதை தொடர்ந்து 53 படகுகளையும் ஏற்கனவே தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 144 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் நேற்று கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 7 பேரையும் கைது செய்து அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இன்று பிரதமருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை அரசு கைது செய்த 60 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்யத 146 மீன்பிடி படகுகளையும் மீட்க வேண்டும் எனவும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க இலங்கை அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இலங்கை அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.