ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ எடுத்துட்டு வரலனா... ஜெயில்ல போடுவீங்களா? கொந்தளித்த ஹைகோர்ட்..!
அசல் ஓட்டுநர் உரிமத்தை மறந்துவிட்டாலும் கூட சிறைத்தண்டனை விதிப்பதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக விரைவில் விரிவான உத்தரவை பிறப்பிப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து சரக்கு வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அசல் உரிமத்தை வைத்திருக்காவிட்டால், சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடமில்லை என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
வாதத்தைக் கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, வாகனங்கள் ஓட்டும் போது அசல் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்பது வேறு; ஓட்டுனர் உரிமம் இல்லாமல், வாகனத்தை ஓட்டுவது என்பது வேறு. இந்த வேறுபாட்டை தெளிவுபடுத்த வேண்டி உள்ளது. அதற்காக ஒருவர் உரிமத்தை எடுத்து வர மறந்து விட்டால், சிறை தண்டனை விதிப்பது என்பது சரியல்ல. இதுதொடர்பாக பின்னர் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.