4 ஆயிரத்து 750 கோடி ரூபாய் பயிர்கடன் வட்டி ரத்து ! முதலமைச்சர் அதிரடி உத்தரவு !
அரியானாவில் ரூ.4,750 கோடி பயிர்கடன் வட்டி ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அரியானாவில் பாஜக. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக உள்ளார். விரைவில் அரியானா சட்டசபை தேர்தல் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து விவசாயிகள் வாங்கிய பயிர்கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகை ரூ.4,750 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் , விவசாயிகளின் நலன் கருதி பயிர் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகை ரூ.4,750 கோடி ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
இந்த தொகையை ரூ.5,000 கோடி வரை உயர்த்துவதற்கு ஆலோசித்து வருவதாகவும், இதன் மூலம் ஆரம்ப வேளாண் கூட்டுறவு சங்கங்கள் , மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கிகள் மற்றும் நில அடமான வங்கி உள்ளிட்டவற்றில் இருந்து கடன் பெற்ற சுமார் 10 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள் என்றும் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்