பாராட்டு விழாவை எதிர்பார்த்து அறிவித்தாரா முதலமைச்சர்...!! சந்தேகம் கிளப்பும் தோழர் முத்தரசன்...!!
கேரளா , புதுச்சேரி , உள்ளிட்ட 7 மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளது போல் தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் .
காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது , அதற்கு அதிமுக அரசு துணை போகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார் . தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சிறப்பு மாநில மாநாடு நடைபெற்றது . அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார் , பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார் .
காவிரி டெல்டாவில் நெல் கொள்முதலில் பெரும் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம் , லாரிக்கு விவசாயிகளிடமிருந்து கட்டாயமாக மூட்டைக்கு 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது , முதலில் அதை தடுத்து நிறுத்த வேண்டும் அதைவிட்டுவிட்டு அங்கு பணியாற்றும் பணியாளர்களை பணி இடைநீக்கம் செய்து நிர்வாகம் நன்றாக போலி நாடகம் நடத்துகிறார்கள் . தற்போது தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக நோட்டிஸ் வழங்கியுள்ளனர் . டாஸ்மாக்குக்கு இலக்கு நிர்ணயம் செய்யும் இந்த அரசு நெல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயித்து முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபடவேண்டும் . குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டும் போராடவில்லை அனைத்து தரப்பு மக்களும் போராடுகின்றனர் .
கேரளா , புதுச்சேரி , உள்ளிட்ட 7 மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறியுள்ளது போல் தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் . காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முதல்வர் அறிவித்ததை வரவேற்கிறோம் இதற்காக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறுவது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும் , காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கமத்திய அரசு முயற்சி செய்கிறது அதற்கு மாநில அரசு துணை போகிறது என்ற முத்தரசன் , வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொடரும் என்றார் .