நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம் !! எதிர்ப்புகளை தவிடு பொடியாக்கிய அமித்ஷா !!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், இன்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ஆம் ஆண்டிலேயே பாஜக நிறைவேற்ற முனைப்பு காட்டியது.
ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பன்மை இல்லாமை. கடந்த அரசின் பதவிக்காலம் முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலவதியாகி விட்டது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
மசோதாவுக்கு ஆதரவாக 334 உறுப்பினர்களும், எதிராக 106 உறுப்பினர்களும் வாக்களித்ததால் மக்களவையில் நிறைவேறிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு மசோதாவுக்கு ஆதராக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இரு அவைகளிலும் நிறைவேறிய மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னர் சட்டமாகியுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 10-ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசின் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது.
தற்போது, குடியுரிமை சட்டத்திருத்த நடைமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்ததாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சட்டத்தை அமல்படுத்துவதில் ஒரு அங்குலம் கூட பின் வாங்க மாட்டோம் என அமித்ஷா கூறியிருந்தார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சட்டம் அமலானது. குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டத்தை அமல்படுத்த குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.