தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து அஜித் பவார் நீக்கம் !! சரத் பவார் அதிரடி !!
தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜகவுடன் இணைந்து மகாராஷ்ட்ராவின் துணை முதலமைச்சரான என்சிபி சட்டப்பேரவை குழு தலைவர் அஜித்பவார் அப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிவசேனா, தேதியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தன. ஆனால் திடீர் திருப்பமாக என்சிபியின் சட்டமன்ற குழுத் தலைவரும், சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், 30 எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்ததால் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டது.
தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராகவும், அஜித்பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர் . இது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு தெரியாமல் நடந்துவிட்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம், அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 42 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தக்கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் பொறுப்பில் இருந்து அஜித் பவார் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை குழு தலைவராக ஜெயந்த் பட்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சரத் பவார் அறிவித்தார்.