பிரதமருடன் அரசியல் பேசவில்லை... பாஜகவுடன் கூட்டணி தொடரும்... அடித்து கூறும் ஓ. பன்னீர்செல்வம்!
அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து, இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவை கோரியதாக செய்தி வெளியானது.
பிரதமரைச் சந்தித்து இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை கோரியதாக செய்தி வெளியான நிலையில், பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட பாஜக விரும்பியதாக தகவல் வெளியானது. ஆனால், இடைத்தேர்தல்களில் அதிமுகவே வேட்பாளார்களை நிறுத்தும் என்பதை கூட்டணி கட்சிகளிடம் சொல்லிவிட்டோம் என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமி உறுதிபட தெரிவித்தார். “அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக பாஜக தலைவர்கள் பலரும் சொல்லிவிட்டார்கள்” என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
ஆனால், வேலூர் தேர்தலை போலவே இடைத்தேர்தலிலும் பாஜகவை பிரசாரத்துக்கு அழைக்க அதிமுக விரும்பவில்லை என தகவல் வெளியானது. இதனால், பாஜக தரப்பில் அதிருப்தி நிலவிவருகிறது. மேலும் பாமக, தேமுதிக ஆதரவை கேட்ட அதிமுக, பாஜக ஆதரவை கோரவில்லை. இதை மனதில் வைத்துதான், “அதிமுக எங்களுடைய ஆதரவைக் கோரவில்லை” என்று பேட்டி அளித்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கும்பகோணத்தில், “இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது கட்சி தலைமை இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து, இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவை கோரியதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து திருமழிசையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “பிரதமருடனான சந்திப்பில், அரசியல் பேசப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்காக பாஜக பிரசாரத்தில் ஈடுபடும்.” என்று தெரிவித்தார்.