சம்மர் டைம்ல "சேமியா இட்லி" சாப்பிடலாம் வாங்க.!
சாதாரணமாக அனைவரும் அரிசி மாவு, ரவை, கோதுமை போன்றவற்றில் தான் இட்லி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் சேமியாவை வைத்தும் இட்லி செய்து சாப்பிடலாம். இந்த சேமியாவை வைத்து எளிதாக சேமியா இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சேமியா - 200 கிராம்
ரவை - இரண்டு கப்
தயிர் - மூன்று கப்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு- ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு- அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி- ஒரு சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சமையல் குறிப்பு வழியாக பகிரப்பட்டது ப.சுப்ரமணிகவிதா
செய்முறை :
சேமியா இட்லி செய்வதற்கு முதலில் பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு, சீரகத்தை மிக்ஸியில் போட்டு நைஸாக பொடித்துக் கொள்ளவும்.
பிறகு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகப் பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் சேமியா மற்றும் ரவையைக் கொட்டிக் கிளறி சற்று வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு வறுத்த சேமியா, ரவை கலவையை கீழே இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.
நன்றாக ஆறியவுடன், அதில் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.
பிறகு, இட்லி பாத்திரத்தில் உள்ள இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி, அதில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி வேக விட்டு எடுத்தால் சுவையான சேமியா இட்லி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், இட்லி மிளகாய்ப்பொடி அருமையாக இருக்கும்.