அத்வானிக்கு ஜாமீன் - அயோத்தியில் ஆதித்யநாத் சிறப்பு பூஜை!!
அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு பூஜை செய்து, வழிபட்டார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான அடுத்த நாள், அவர் ராமர் கோயிலில் சிறப்பு பூஜை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதில் முக்கிய நபர்களாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட பலர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது, 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலுக்கு உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் சென்றார். அங்கு சுமார் அரை மணி நேரம் ராமர் கோயிலில் இருந்தார். பின்னர் சரயு நதிக்கரையில் பூஜையில் ஈடுபட்டார். பிரசித்தி பெற்ற ஹனுமன்கரி கோயிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார்.
யோகி ஆதித்யநாத்துடன் பாஜக தலைவர் தரம் தாஸ் உள்ளிட்டோர் இருந்தனர். பாபர் மசூதி வழக்கு தரம் தாஸ் மீதும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.