கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற கொடூர மனைவி…. புது ஸ்டைலில் கொலை செய்த இருவருக்கும் 22 ஆண்டுகள் சிறை தண்டனை….
ஆஸ்திரேலியாவில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கள்ளக் காதலனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கேரளாவை சேர்ந்த சாம் ஆப்ரஹாம், மனைவி சோபியா சாம் ஆகியோர் வசித்து வந்தனர். . இவர்களுக்கு 4 வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்ரஹாம் தனது வீட்டில் பிணமாக கிடந்தார்.
மாரடைப்பில் ஆப்ரஹாம் இறந்துவிட்டதாக கூறிய சோபியா, கேரளாவுக்கு சென்று இறுதிச் சடங்குகளை செய்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனையில், ஆப்ரஹாமின் ரத்தம் மற்றும் கல்லீரலில் சையனைடு விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் சோபியாவைப் பிடித்து விசாரணை செய்தனர். அதில் தானும் தனது கள்ளக் காதலனும் சேர்ந்து ஆப்ரஹாமை கொன்றதை ஒப்புக் கொண்டார்.
சோபியா தனது கணவருக்கு சாப்பாடு கொடுக்கும்போது, ஆரஞ்சு பழத்தில் சிறிது சயனைட்டு வைத்து கொடுத்துள்ளார், ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட சில நொடிகளில் ஆப்ரஹாம் உயிரிழந்தார்.
இதில் திருமணத்துக்கு முன்னரே அருணுடன் பழகி வந்த சோபியா, திருமணத்துக்கு பின்னரும் அந்த உறவை தொடர்ந்துள்ளார். இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஆப்ரஹாமை திட்டம் போட்டு கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆப்ரஹாம் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, ரயில்நிலையத்தில் வைத்து அருண் ஆப்ரஹாமை கொல்ல முயன்றுள்ளார். இதில் கழுத்தில் காயங்களுடன் தப்பித்த ஆப்ரஹாம், உறவினர்களிடம் இனிமேல் கேரளா வந்தால் சவப்பெட்டியில் தான் வருவேன் என்றும் தான் இறந்துபோனால் தனது தாத்தா கல்லறை அருகிலேயே தன்னை புதைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தாராம்.
மேலும் சோபியாவின் நடவடிக்கைகள் குறித்து கூறியும், அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், சோபியாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அருணுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்ரஹாமின் மகன், தற்போது சோபியாவின் சகோதரியின் மேற்பார்வையில் விடப்பட்டுள்ளார்.