இந்தியாவில் மேலும் 28 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..? வதந்திகளை நம்பாதீங்க.. தெளிவுபடுத்திய மத்திய அரசு
இந்தியாவில் மேலும் 28 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததாக பரவிய தகவல் வதந்தி என்றும் அது உண்மையானது அல்ல; போலியாக சித்தரிக்கப்பட்டது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4500ஐ நெருங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, வரும் 14ம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பாடில்லை. அதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது வாபஸ் பெறப்படுமா என்பது நாட்டு மக்களின் பெரிய சந்தேகமாகவுள்ளது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் ஒரு வார இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அடுத்த அப்டேட்டை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். ஆனால் அதற்கிடையே, சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரவுகின்றன.
அதில் ஒன்றாக, உலக சுகாதார அமைப்பின் தகவல் என்று போலியாக சித்தரிக்கப்பட்ட ஒரு தகவல் வைரலானது. அதாவது, இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரையிலான ஊரடங்கு முதற்கட்டம் என்றும், அது முடிந்ததும், ஏப்ரல் 15லிருந்து 19 வரை ஊரடங்கு பின்வாங்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 20லிருந்து மே 18 வரை மேலும் 28 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஒரு தகவல் பரவியது.
இதை பலரும் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்துகொண்டிருந்த நிலையில், அந்த போலியாக சித்தரிக்கப்பட்டது என்றும் அது வெறும் வதந்திதான் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ள 274 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவலும் வெளிவந்துள்ளது. ஆனால் ஊரடங்கு குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை மக்கள் வதந்திகளை நம்பாமல் காத்திருக்க வேண்டும்.