முதல்வருக்கு கோயில் கட்டும் திருநங்கைகள்!! நெகிழ்ச்சி சம்பவம்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்ட முடிவு செய்திருக்கும் திருநங்கைகள், கோயிலுக்கான அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஆந்திர மாநில முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு இருந்து வருகிறார். ஆந்திராவில் வாழும் திருநங்கைகளுக்காக பல நல்ல செயல் திட்டங்களை வகுத்து சந்திரபாபு நாயுடு செயல்படுத்தியுள்ளார்.
ஆந்திராவில் வாழும் திருநங்கைகளின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், இலவச வீடு மற்றும் இதர பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். திருநங்கைகளுக்காக இதற்கு முன் எந்த தலைவரும் இந்த அளவிற்கு திருநங்கைகளுக்காக சேவை செய்ததில்லை. எனவே தங்கள் வாழ்வை உயர்த்திய சந்திரபாபு நாயுடுதான் தங்களின் கடவுள் என கூறும் திருநங்கைகள், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்ட திட்டமிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நாண்டியால் பகுதியில், கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் பூமா அகிலா பிரியா, மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கோயிலில் சந்திரபாபு நாயுடுவின் வெள்ளி உருவச் சிலையை வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளது. வாழும் அரசியல் தலைவருக்கு கோயில் கட்டுவது இதுவே முதல்முறை. திருநங்கைகளின் வாழ்வு மேம்பட உழைத்த சந்திரபாபு நாயுடுவிற்கு திருநங்கைகள் அளிக்கும் மரியாதையாகவே, அமையப் போகும் கோயில் அமைந்துள்ளது.