நாட்டின் உயர்ந்த தலைவரே முதலில் 'அதை' செய்யுங்கள்...! பின்பு யோகா செய்யுங்கள்! மோடிக்கு பிரகாஷ் ராஜ் டுவிட்
டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி, கடந்த 7 நாட்களாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, கோபால் ராய்,சத்யேந்திர ஜெயின் ஆகியோர் துணை நிலை ஆளுநர் இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்தி வரும் முதலமைச்சர் கெஜ்ரிவாலை சந்திக்க கர்நாடக, கேரள, ஆந்திரா, மேற்கு வங்க முதலமைச்சர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலை/யிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நாட்டின் மிக உயர்ந்த தலைவரே. நீங்கள் உடல் தகுதி சவாலிலும், யோகா, உடற்பயிற்சி செய்வதிலும் மிகவும் பரபரப்பாக இருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டுக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிப்பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களின் அதிகாரிகளிடம் கூறி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்ற சொல்லுங்கள். கெஜ்ரிவால் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார். நல்ல திட்டங்களையும் தீட்டி செயல்படுத்தி வருகிறார். இதைப் படித்த பின் உங்களின் உடற்பயிற்சியையும், வேலையையும் கூட செய்யலாம் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த பதிவில் கூறியுள்ளார்.