சப்பாத்தி, தயிர்சாதம், ஸ்வீட் இது ஹோட்டல் மெனு அல்ல…! அரசு பள்ளி மாணவர்களுக்கான மெனு..! எங்கே தெரியுமா?
பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுவது வழக்கம். இந்த திட்டத்தை அமல் படுத்தியது பெருந்தலைவர் காமராஜர். இந்த திட்டத்தினால் பயனடைந்து, இன்று நல்ல நிலையில் முன்னேறி இருக்கும் அதிகாரிகள் பலர். சாப்பாடு கிடைக்கும்னு தான் பள்ளிக்கூடம் சென்றேன். இன்று ஒரு அதிகாரியாக உயர்ந்திருக்கிறேன். என்று சத்துணவு திட்டத்தினால், தங்கள் வாழ்க்கையில் முன்னேறிய பலரும் கூறி இருக்கின்றனர்.
இந்த மதிய உணவு திட்டத்தினை இன்னும் முன்னேற்றி இருக்கிறது புதுச்சேரி அரசு. சமீபத்தில் நடைபெற்ற ஒரு பள்ளி கட்டிட திறப்பு விழாவின் போது, இந்த தகவலை மாணவர்கள் மத்தியில் தெரிவித்திருகிறார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
இன்று தனியார் பள்ளிகளை தேடி மக்கள் படையெடுத்து கொண்டிருக்கும் தருணத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரியிலும் இதே போல் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பங்காக, மாணவர்களுக்கான மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம் , ஸ்வீட் போன்றவை சேர்த்து, நல்ல சத்தான ஆகாரம் வழங்கப்படும். என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த திட்டத்திற்கு உதவ தொண்டு நிறுவனம் ஒன்று முன் வந்திருப்பதாகவும், அதனுடன் இணைந்து இந்த சேவையை செய்யப்போவதாகவும், புதுச்சேரி முதல்வர் அந்நிகழ்வின் போது தெரிவித்திருக்கிறார்.