Asianet News TamilAsianet News Tamil

அரியானா, பஞ்சாபில் கலவரம் கட்டுக்குள் வந்தது; பதற்றம் நீடிப்பு… 9 தேரா மையங்களுக்கு ‘சீல்’ வைப்பு; போலீஸ் ஆணையர் சஸ்பெண்ட்

panjab and hariyana riot
panjab and hariyana  riot
Author
First Published Aug 26, 2017, 9:36 PM IST

பலாத்கார வழக்கில் குற்றவாளி என தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத்சிங் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் ராணுவத்தினரின் தீவிர நடவடிக்கையால் கட்டுக்குள் வந்தது. ஆனால், பஞ்சாப், அரியானாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

கடந்த 2002ம் ஆண்டு 2 பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேராசச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் சிங்கை குற்றவாளி என பஞ்ச்குலா நகரில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று முன் தினம் அறிவித்தது.

panjab and hariyana  riot

அதைத் தொடர்ந்து பஞ்ச்குலா நகரம் உள்ளிட்ட அரியானாவில் பல நகரங்கள், பஞ்சாப் மாநிலம் ஆகியவற்றில் குழுமி இருந்த குர்மீத்தின் ஆதரவாளர்கள் மிகப்பெரிய வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 2 மாவட்டபோலீஸ் கண்காணிப்பாளர்களும் அடங்கும்

இதையடுத்து, ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக தேரா சச்சா சவுதா அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தற்காலிகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

panjab and hariyana  riot

கலவரம் குறித்து அரியானா மாநில அரசு வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், “ இதுவரை கலவரத்தால் 32  பேர் பலியாகியுள்ளனர். அதில் 28 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.பஞ்ச்குலாவில் மட்டும் 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 24 வாகனங்கள், 5 கைதுப்பாக்கிகள் 79 ரவுண்டு குண்டுகள், 2 துப்பாக்கிகள், 52 ரவுண்டுகுண்டுகள், இரும்பு கம்பிகள், கட்டைகள், ஹாக்கி மட்டைகள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. 8 வகையான எப்.ஐ.ஆர். அறிக்கைகள்பஞ்ச்குலாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன’’ என்று ெதரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய, ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தாத பஞ்ச்குலா போலீஸ் துணை ஆணையர் அசோக் குமாரைசஸ்பெண்ட் செய்து அரசு நேற்று நடவடிக்கை எடுத்தது.

கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், பரவாமல் தடுக்கும் வகையில் ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர், போலீசாருடன் இணைந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

panjab and hariyana  riot

மேலும், குருஷேத்ரா பகுதியில் இருந்த தேரா சச்சா சவுதா அமைப்பின் 9 பிராத்தனை கூடங்களையும் போலீசார் சீல் வைத்து, அங்கிருந்தவர்களை ெவளியேற்றினர். அங்கு 2500 லத்திகள், கூர்மையான ஆயுதங்களை  போலீசார் கைபற்றினர்.

சிர்சா நகரில் அமைந்துள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் தங்கி இருந்த பெண்கள், குழந்தைகள் என 10 ஆயிரத்துக்கும்மேற்பட்ட ஆதரவாளர்களை அங்கிருந்து வௌியேற ராணுவத்தினர் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து தேரா சச்சா ஆதரவாளர்கள் வெளியேறி வருகின்றனர்.

panjab and hariyana  riot

அதேசமயம், தேரா சச்சா தலைமை அலுவலகத்துக்குள் ராணுவத்தினர் செல்லவில்லை. அதற்கான உத்தரவு ஏதும் வராததால், தாங்கள் செல்லவில்லை என்று தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ராஜ்பால் புனியா தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில், “ அரியானா, பஞ்சாபில் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, ஆனால், இன்னும் பதற்றமான நிலைமை நீடிக்கிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர்ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பஞ்சாப், அரியானாவில் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios