முன்னாள் முதலமைச்சர்கள் அரசு பங்களாவை அனுபவிக்க உரிமை இல்லை! உச்சநீதிமன்றம்
உத்தரபிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசு பங்களாக்களை அனுபவிக்க உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்த்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முந்தைய அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது, முன்னாள் முதலமைச்சர்களுக்கு அரசு பங்களா ஒதுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், முன்னாள் குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர்களுக்கு பணி காலம் முடிந்த பின்னர், அரசு பங்களா ஒதுக்குவது குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின்போது, பணிகாலம் முடிந்த முன்னாள் முதலமைச்சர்களுக்கு அரசு பங்களா கிடையாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்களுக்கு அரசு பங்களாவை அனுபவிக்க உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டத்தின்கீழ் அனைவரும் சமம் என்பதை மறுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்வதாகவும், இந்த சட்டம் தன்னிச்சையான, சமூக பாகுபாட்டை உண்டாக்கும், அனைவரும் சமம் என்ற கொள்கையை மீறும் வகையில் இருப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.