"புதிய 200 ரூபாய் நோட்டு" - மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ‘ஐடியா’
மத்தியஅரசு மீண்டும் ரூ.1000 நோட்டை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டை அறிமுகம் செய்ய வேண்டும் என மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரிதிவிராஜ் சவான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநில சட்டசபைக் கூட்டம் நடந்து வருகிறது. அதில் முன்னாள் முதல்வர் பிரிதிவிராஜ் சவான் நேற்று பேசியதாவது-
சிரமம்
பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளைத் தடை செய்தார். இந்த அறிவிப்பால் சாமானிய மக்கள், விவசாயிகள், ஏழை சிறு வியாபாரிகள், கிராம மக்கள் என அனைத்து தரப்பினரையும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை எதிர்வரும் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச தேர்தல்களை மனதில் வைத்துதான் எடுக்கப்பட்டுள்ளது.
அயல்நாட்டு நிறுவனங்கள்
மக்கள் தங்கள் வாங்கும் பொருட்கள், பெறும் சேவைகளக்கு பணம் செலுத்த, அயல்நாட்டு மேமென்ட் நிறுவனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது. மத்தியஅரசு மக்களின் நிதிப்பரிமாற்ற விஷயங்களுக்கு, வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தக் கூடாது.
தீர்க்க முயற்சி
கூட்டுறவு வங்கிகள் மக்களிடமிருந்து ரூ.500, ரூ.1000 டெபாசிட் பெறவும், பணம்மாற்றவும் ரிசர்வ் வங்கி மத்தியஅரசின் உத்தரவின் பேரில் கட்டுப்பாடு விதித்துள்ளது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தனது மதிப்பை பயன்படுத்தி, மத்தியஅரசு, மற்றும் நிதியமைச்சரிடம் இந்த சிக்கலை தீர்க்க அவர் முயற்சிக்கலாம்.
தண்டனை
கூட்டுறவு வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், கிராமப்புற பொருளாதாரமே சீர்குலைந்துள்ளது. கூட்டுறவு துறை பணப்பரிமாற்றத்தில் யாரேனும் தவறு செய்தால், அவர்களை தண்டியுங்கள், வங்கி அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள். அதற்காக, ஒட்டுமொத்தமாக கூட்டுறவு பயனாளிகள் அனைவரும் பாதிக்கப்படக்கூடாது.
கேள்வி
பாரதிய ஜனதா தலைவரும் முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ், கடந்த 2014ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், கருப்பு பணம் பயன்படுத்தவில்லை என்று உறுதியளிக்க முடியுமா?. அப்போது தேர்தல் செலவுகளுக்கு டெபிட், கிரெடிட் கார்டுகளையா பயன்படுத்தினீர்கள். உலகில் எந்த நாடும், இதுபோல் பணமில்லா பொருளாதாரத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.