பேருந்து கட்டணம் அதிரடி குறைப்பு !! குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயாக நிர்ணயம் !!
மும்பையில் பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
மும்பையில் மின்சார ரெயில்களுக்கு பிறகு மும்பையில் மக்கள் பெஸ்ட் பஸ்களை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெஸ்ட் நிர்வாகம் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனாலும் கட்டண உயர்வு, போக்குவரத்து நெரிசல் போன்ற பல்வேறு காரணங்களால் 40 லட்சமாக இருந்த பெஸ்ட் பயணிகள் எண்ணிக்கை தற்போது 25 லட்சமாக குறைந்தது. இதனால் பெஸ்ட் நிர்வாகம் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பயணிகளை கவர பஸ் கட்டணத்தை குறைக்க பெஸ்ட் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி ரூ.8 ஆக இருந்த குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.5 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த கட்டண குறைப்பு திட்டத்துக்கு பெஸ்ட் கமிட்டி, மாநகராட்சி மற்றும் மும்பை பெருநகர போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தன.
இதையடுத்து நேற்று பெஸ்ட் பஸ் கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. இதன் காரணமாக மும்பையில் இனிமேல் பொதுமக்கள் ரூ.5 கொடுத்து 5 கி.மீ. தூரத்துக்கு பெஸ்ட் பஸ்களில் பயணம் செய்யலாம்.
ரூ.20 இருந்தால் தானே, நவிமும்பை பகுதிகளுக்கு செல்லமுடியம். இதேபோல வெறும் 6 ரூபாய் இருந்தால் ஏ.சி. பஸ்சில் 5 கி.மீ.க்கு பயணம் செய்யலாம்.
தற்போது கட்டணம் குறைக்கப்பட்டதால் பலர் கார், மோட்டார் சைக்கிள் போன்ற தனியார் வாகனங்களை தவிர்த்து ஏ.சி. பஸ்சில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
.
பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டதால் நேற்று வழக்கத்தை விட பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதாகவும், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.