முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை..!
இன்று பல்வேறு விளையாட்டுகளில் முன்னணியாக விளங்கும் வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். கிரிக்கெட் வீரர்கள் சச்சின், யுவராஜ், பிசிசிஐ தலைவர் கங்குலி, பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, தடகள வீராங்கனை ஹிமாதாஸ் உட்பட 40 பேர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள்,கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தினமும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக தினமும் பல்வேறு துறை வல்லுநர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபடுகிறார். மத்திய அமைச்சக செயலாளர்கள், அதிகாரிகள், மாநில முதல்வர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், ஆன்மீக அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள் போன்ற பலருடன் கலந்துரையாடி கொரோனா வைரஸை தடுப்பது குறித்து ஆலோசனைகள் பெற்று வருகிறார். தினமும் 200க்கும் மேற்பட்டோர் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவதாக அண்மையில் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டது.
அந்த வகையில் இன்று பல்வேறு விளையாட்டுகளில் முன்னணியாக விளங்கும் வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். கிரிக்கெட் வீரர்கள் சச்சின், யுவராஜ், பிசிசிஐ தலைவர் கங்குலி, பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, தடகள வீராங்கனை ஹிமாதாஸ் உட்பட 40 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுப்பது குறித்தும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை நீக்குவது குறித்தும் அவர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.