15 குழந்தைகளைப் பெத்துக்கிட்டா 'இதெல்லாம்' நடக்காது...! மிசோராமில் வித்தியாச அறிவிப்பு
வெளி மாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுக்க, குறைந்தது 15 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மிசோராம் மாநில பெண்களுக்கு சில அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
இந்தியாவில் மக்கள் தொகை மிக குறைவாக உள்ள மாநிலத்தில் மிசோராம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இயற்கை சூழலுடன் பசுமையான நிலப்பகுதிகளை கொண்ட மிசோராம் மாநிலத்தில், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 52 பேர் மட்டுமே வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இயற்கை சூழலுடன் பசுமையான நிலப்பகுதி கொண்ட மிசோராமில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குடிபெயர்ந்து வருவதாக புகார்
எழுந்துள்ளது.
இதனால் மிசோராம் மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி அங்குள்ள சில அமைப்புகள் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மிசோராம்
மக்கள், அதிகளவு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த வித்தியாசமான அறிவிப்பு.
மிசோராம் தம்பதியினர் குறைந்தது 15 குழந்தைகளாவது பெற்றுக் கொண்டால்தான், வெளி மாநிலத்தவர்களின் குடியேற்றங்கள் நடக்காமல் தடுக்க முடியும் என்றும் அதனால் மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும என்றும் அந்த அமைப்புகள் கூறுகின்றன.
இதற்காக எங்கள் பெண்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்படி ஊக்குவிக்கிறோம் என்றும் விளக்கமளித்துள்ளன. மேலும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் தொழில் வளம் உயரும் என்றும் அந்த அமைப்புகள் கூறுகின்றன.