பா.ஜனதா முதல்வரின் மகனுக்கு 5 ஆண்டு சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ...
மணிப்பூர் மாநில முதல் அமைச்சரின் மகன் அஜய் மீட்டாயுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநில முதல் அமைச்சர் என்.பிரேன் சிங்கின் மகன் அஜய் மீட்டாயுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி, ரோஜர் என்ற இளைஞர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எஸ்யூவி காரில் வந்து கொண்டிருந்த அஜய் மீட்டாய், ரோஜரின் காரை முந்திச்செல்ல முயன்றார். ஆனால், ரோஜர் காருக்கு வழிவிடவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் மீட்டாய் ரோஜரை துப்பாக்கியால் சுட்டத்தில் ரோஜர் உயிரிழந்தார்.
இந்த வழக்கு மணிப்பூர் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில், இந்த வழக்கு விசாரனை உரிய முறையில் நடைபெறவில்லை என கூறி ரோஜரின் தாயார் இரோம் சித்ரா தேவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை மே 21 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் நேற்றுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், அஜய் மீட்டாயுக்கு எதிரான வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கிய விசாரணை நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.