கொரோனா ஊரடங்கு: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கோடிகளை வாரி வழங்கிய கோட்டக் மஹிந்திரா வங்கி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த நிலையில், கோட்டக் மஹிந்திரா வங்கி சார்பில் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்துவிட்ட நிலையில், 28 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா, சமூக தொற்றாக பரவுவதை தடுக்கும் வகையில், இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டிய நிலையில் உள்ள அரசாங்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்துவருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழில்துறை, தொழில் முனைவோர், சிறு குறு வணிகர்கள், தினக்கூலிகள், மாத ஊதியதாரர்கள் என அனைத்து தரப்புக்குமான நிதி சார்ந்த சலுகைகளையும் அறிவிப்புகளையும் அரசு அறிவித்துவருகிறது.
அதுமட்டுமல்லாமல்,, கொரோனாவிற்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கான மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. இந்த பணிகளை எல்லாம் மேற்கொள்வதற்கு அரசுக்கு நாட்டு மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடியை பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வழங்கினார். கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, ரஹானே ஆகியோரும் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நிதியுதவி வழங்கினார்கள்.
இந்நிலையில், கோட்டக் மஹேந்திரா வங்கி சார்பில் பிரதமர் கேர்ஸுக்கு ரூ.25 கோடியும் மகாராஷ்டிரா முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 கோடியும் வழங்கப்பட்டது. அதுபோக அந்த வங்கியின் எம்.டி உதய் கோட்டக், தனிப்பட்ட முறையில், பிரதமர் கேர்ஸ் நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார். எனவே மொத்தமாக கோட்டக் மஹிந்திரா சார்பில் மட்டும் மொத்தம் ரூ.60 கோடி நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.