மதுபானங்களை டோர்டெலிவரி செய்யும் சிறுவர்கள் - ராஜஸ்தான் கிராமப் பகுதிகளில் அரங்கேறும் அவலம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் பள்ளி மாணவர்களை மதுபானங்களை டோர்டெலிவரி செய்யும் குற்றச் சம்பவம் நடந்து வருகிறது.
ராஜஸ்தானில் பிக்கானர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்து வருகிறது. மாநிலத்தின் காஜுவாலா பகுதியைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.
அங்குள்ள சுமார் 22க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறைக் காலம் என்பதால் சிறுவர்களை மதுபானம் டோர் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
படிக்கும் சிறுவர்களும் குடும்ப சூழ்நிலைக் காரணமாக இந்த வேலையை செய்து வருகின்றனர். ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சுற்றி 5கி.மீ தொலைவில் உள்ள சிறுவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்க்கும் நோக்கில் மாணவர்களுக்கு ஆரஞ்சு வண்ணத்தில் மிதிவண்டி கொடுக்கப்பட்டது. ஒரு மிதிவண்டி ரூ. 2,937 மதிப்பில் சுமார் 2.95 லட்ச மிதிவண்டிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் 50.000 மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு மாணவர்கள் மது கேட்பவர்கள் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் குற்றச் சம்பவம் அரங்கேறி வருகிறது.
இந்தச் செயல்கள் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தெரியும் ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.