நள்ளிரவில் பேருந்தில் இருந்து தனியாக இறங்கிய இளம் பெண்….. டிரைவரும், கண்டக்டரும் என்ன செய்தார்கள் தெரியுமா ?
கேரளாவில் நள்ளிரவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தனியாக இறங்கிய இளம் பெண்ணை, அவரது உறவினர் வந்து அழைத்துச் செல்லும் வரை பஸ்சை நிறுத்தி அவருக்கு தணையாக இருந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரள மாநிலத்தை சேர்ந்த பேருந்து ஒன்று கடந்த ஞாயிறுக் கிழமை அன்று திருவனந்தபுரத்தில் இருந்து கோவை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கோபாகுமார் என்பவர் டிரைவராகவும், ஷைய்ஜூ என்பவர் கண்டக்டராகவும் பணிபுரிந்தனர்.
இந்நிலையில் அந்த பேருந்தில் பயணம் செய்த ஆதிரா என்ற இளம்பெண் ஒருவர் இறங்க வேண்டிய கொல்லம் அருகே உள்ள சங்கரமங்கலம் பேருந்து நிறுத்தத்திற்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பேருந்து வந்தது.
அப்போது அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாமல் கும்மிருட்டாக இருந்தது. அந்த பெண் தனது சகோதரரை அழைத்துச் செல்ல வருமாறு செல்போனில் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆதிரா பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போது வரை அவரை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. பஸ் ஸ்டாப்பில் இறங்கிய ஆதிரா யாருமே இல்லாததால் செய்வதறியாது திகைத்து நின்றார். இதனால் தனியாக அந்த பெண்ணை இறக்கிவிட்டு செல்ல மனமில்லாமல் அவரது உறவினர் வரும் வரை அப்பேருந்தின் டிரைவரும், கண்டக்டரும் காத்திருந்தனர். பி
சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் சகோதரர் வந்த பின்னரே அவர்கள் பேருந்தை எடுத்துச் சென்றனர். அந்த இளம்பெண்ணின் அண்ணன் வருவதற்கு அரை மணி நேரத்துக்கு மேல் ஆகியும் அவருக்காக பேருந்தை அவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.
இதுகுறித்து அந்த பெண் பேஸ்புக்கில் பதிவு செய்து, அந்த கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த பதிவு தற்போது வைரலாகி பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் இந்த மனிதாபிமானமிக்க செயல் ஊடகங்கள் வாயிலாக இந்தியா முழுவதும் பரவியுள்ளது. அன்பால்தான் இந்த உலகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.