‘மாடு விற்பனை தடையில் தலையிட விரும்பவில்லை’ - மத்திய அரசுக்கு ஆதரவாக கேரள உயர் நீதிமன்றம் கருத்து!
மத்திய அரசின் மாடு விற்பனை தடை விவகாரத்தில் தலையிடுவதற்கு கொச்சி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
4 வார தடை
மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ள மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்பதற்கு தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2 பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவை நேற்று முன்தினம் நீதிபதிகள் எம்.வி. முரளிதரன் மற்றும் சி.வி. கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு முதலில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறி, மத்திய அரசின் நடவடிக்கைக்கு 4 வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டது.
அடிப்படை உரிமை பாதிப்பு
இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சி உயர் நீதிமன்றத்தில் ஏ.ஜி. சுனில் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மத்திய அரசின் நடவடிக்கை அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. எனவே, மிருக வதை தடைச்சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். முன்பு இருந்ததை போன்று, இறைச்சிக்காக சந்தைகளில் மாடுகள் விற்கப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தடை விதிக்கப்படவில்லை
இந்த வழக்கு கொச்சி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவநிதி பிரசாத் சிங் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் புதிய விதிகளில் மாட்டிறைச்சியை விற்பனை செய்யவோ அல்லது சாப்பிடுவதற்கோ எந்த விதமான தடையும் விதிக்கப்படவில்லை. அதேபோன்று அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவது போன்ற எதையும் விதிகளில் மத்திய அரசு குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று அவர்கள் கூறினர். இதையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.