காவிரி விவகாரம் ; முரண்டு பிடிக்கும் கர்நாடக...உச்சநீதிமன்றத்தை நாட முடிவு!
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஜூலை 2-ம் தேதி காவிரி ஆணையத்தில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, அமைச்சர்கள், நீர்வளத்துறை சார்ந்த அதிகாரிகள், கர்நாடக மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட விதத்திற்கு பாஜக உட்பட அனைத்து கட்சிகள் சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்திதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகள் நாடாளுமன்றத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஜூலை 18ம் தேதி துவங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது கர்நாடகாவை சேர்ந்த 40 எம்.பி.க்களும் இது தொடர்பாக பிரச்சனை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.