விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது இஸ்ரோ… அதிக எடை கொண்ட GSLV Mark-III ராக்கட் விண்ணில் செலுத்த ரெடி….
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இலக்குடன், 200 யானைகளின் எடையைக் கொண்ட இந்தியாவின் மிக அதிக பளு கொண்ட ராக்கட்டை அடுத்த வாரத்தில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்தவுள்ளது.GSLV Mark-III எனப்படும் இந்த ராக்கட், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும் இந்த ராக்கட், 8 டன் எடை கொண்ட ஆய்வு நிலையத்தை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டதாகும்.
மேலும், இந்த ராக்கட், 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கட் மூலம், இருவர் முதல் 3 பேர் வரை விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திறன் கொண்ட 4-வது நாடாக திகழும் பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும்.
பலமுறை சோதனைகள் நடைபெற்ற பின்னர்தான் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் திட்டம் முழுமையாகத் தொடங்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முதன்முதலாக, ஒரு பெண்மணியை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.