”தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமையே” - மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!!!
ஆதார் குறித்த வழக்கில், தனி நபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே எனவும், அரசு திட்டங்களை பெற ஆதாரை கட்டாயமாக்க கூடாது எனவும் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது
ஆதார் அடையாள அட்டை என்பது தனிமனைத உரிமையை பாதிக்கிறது என்றும் அரசியல் சாசனத்தின்படி ஒருவரின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என்றும் அதில் அரசு தலையிடுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த கேள்வி குறித்து விசாரித்து முடிவு செய்வதற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த அமர்வில் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ஜே.செல்லமேஸ்வர் ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்த அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வக்கீல்கள் அரவிந்த் தட்டார், கபில் சிபல், கோபால் சுப்பிரமணியம், சியாம் திவான், ஆனந்த் குரோவர், சி.ஏ.சுந்தரம், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலும் அளித்தனர்.
இந்த விசாரணையின்போது, கரக் சிங் மற்றும் எம்.பி. சர்மா வழக்குகளில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்தும் ஆராயப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தனி நபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையே எனவும், அரசு திட்டங்களை பெற ஆதாரை கட்டாயமாக்க கூடாது எனவும் மத்திய அரசுக்கு எதிராக அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.