ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை!! பெங்களூருவிலும் வெளுத்து வாங்கியது !!
தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இன்று பிற்பகலில் பெய்த கனமழை காரணமாக, பொது மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பகல் முழுவதும் வெயில் கொளுத்தி வந்த நிலையில் இரவில் பெய்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாக கோடைக்காலம் வந்துவிட்டதால், தெலுங்கான மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடுடையான வெயில் தகிக்கும். கடும் வெயில் காரணமாக கடந்த 2 வாரங்களில் 10 க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பகல் நேரங்களில் மட்டுமில்லாமல், இரவு நேரங்களில் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், பிற்பகலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புயல் காற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக, பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது.
ஒரு சில மணிநேரத்தில், அதிக மழைப்பொழிவு இருந்ததால், ஹைதராபாத் நகரில் உள்ள மல்கஜ்கிரி, அல்வால், கண்டோன்மென்ட் மற்றும் கப்ரா உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
இதேபோல், விஜயவாடா பகுதியில் வீசிய பலத்த காற்றுவீச்சினால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன . மேலும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவிலும் இன்று பலத்த மழை பெய்துள்ளது. இரவு 7 மணிக்கு மேல் பெய்த கன மழையால் நகரம் முழுவதும் குளிர்ச்சி நிலவியது.