சாமியார் குர்மீத் சிங் வழக்கில் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன? தரையில் படுத்து முரண்டு செய்த ராம் ரஹீம்…..
பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஜெக்தீப் சிங் அளித்த தீர்ப்பு குறித்து சாமியார் ராம் ரஹீம் சிங்கின் வழக்கறிஞர் எஸ்.கே. நர்வானா கூறியதாவது-
தனது சீடர்கள் இருவரை கடந்த 1999ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002 ஆண்டு 2 புகார்கள் அளிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376(கற்பழிப்பு), 506(கொலைமிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு சி.பி.ஐ. நடத்தியவிசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவருக்கு 2 வழக்குகளிலும் தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை தொடர்ச்சியாக அவர் அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு வழக்கிலும் தலா ரூ.15 லட்சம் அபராதம் என மொத்தம் ரூ.30 லட்சம் செலுத்த வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருக்கு இழப்பீடாக தலா ரூ. 14 லட்சம் இழப்பீடு என மொத்தம் ரூ.28 லட்சம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கைகூப்பி, கண்ணீர் விட்டு கதறினார்...
நீதிபதி ஜெக்தீப் சிங் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய போது, சாமியார் ராம் ரஹீமின் முகம் பயத்தால் உறைந்து போனது. தனதுக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டதும் சாமியார் ராம் ரஹீம் தரையில் கிழே விழுந்து, கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
நீதிபதியைப் பார்த்து, ‘ என்னை மன்னித்துவிடுங்கள், நான் அப்பாவி, என்னை மன்னித்து விடுங்கள்’ என்று இருகைகளையும் கூப்பி, கண்ணீர் விட்டு சாமியார் ராம் ரஹீம் கதறினார்.
அதன்பின் சிறை காவலர்கள்,சாமியாரை அழைத்து செல்ல முயன்றபோது, அவர் தரையில் படுத்துக்கொண்டு வர மறுத்து முரண்டுசெய்தார். அதன்பின், காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இழுத்துச் செல்லும்போதுகூட நான் அப்பாவி என்று கதறிக்கொண்டே சாமியார் சென்றார்.
இதையடுத்து சிறையில் சாமியார் ராம் ரஹீமுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, சிறையில் கைதிக்கான உடைகள் வழங்கப்படடன. அவர் சிறையில் 1997ம் எண் சிறையில் அடைக்கப்பட்டார்.