சாமியார் குற்றவாளி என தீர்ப்பு !! கலவரத்தில் பற்றி எரிகிறது பஞ்சாப், அரியானா !! பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு…
பெண் பக்தை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரகீம் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் வெடித்த பயங்கர கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. பஞ்சாபில் 2 ரயில் நிலையங்களுக்கும், பெட்ரோல் பங்கிற்கும் தீ வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது. பஞ்ச்குலா, பெரோஸ்பூர், சோனாபட், சிர்சா, பர்னாலா, சங்ரூர், சண்டிகார் தேசிய நெடுஞ்சாலை , டில்லி உள்ளிட்ட 50க்கும் மேற்ப்டட இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கலவரம் பாதித்த பகுதிகளுக்கு துணை ராணுவ படையினர் விரைந்துள்ளனர். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், அரியானாவில் 45 இடங்களில் கலவரம் வெடித்துள்ளதாகவும், பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.