மது பாட்டிலில் கூலிங் கிளாசுடன் மகாத்மா காந்தி படத்தால் சர்ச்சை..!
இஸ்ரேலை சேர்ந்த மதுபான நிறுவனம், தனது மதுபாட்டிலில் காந்தி படம் இடம்பெற்றதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த மதுபான நிறுவனம், தனது மதுபாட்டிலில் காந்தி படம் இடம்பெற்றதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் மக்கா பிரேவரி என்ற மதுபானம் நிறுவனம் தனது ஒயின் பாட்டிலில் தேசதந்தை மகாத்மா காந்தி படத்தை அச்சிட்டுள்ளது. அதில் காந்தி கலர் டிசர்ட், ஓவர் கோட் அணிந்தும்,, கூலிங் கிளாசுடனும் இருப்பது போன்று உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று நடந்த பூஜ்ய நேரத்தின்போது பேசிய ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் சர்ச்சை படம் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில், ‘‘இஸ்ரேலை சேர்ந்த மதுபான நிறுவனம், தான் தயாரித்த மது பாட்டில்களில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை பொறித்துள்ளது. இதன் மூலம் தேசத் தந்தையான அவரை அவமானப்படுத்தி விட்டது. எனவே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மது பாட்டிலில் உள்ள காந்தியின் உருவப்படத்தை உடனே நீக்கச்செய்ய வேண்டும்,’’ என்றார்.
இது குறித்து மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு கூறுகையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.