நடிப்புத் தொழிலுடன் கள்ள நோட்டும் அச்சடித்த நடிகை… குடும்பத்தோட அரெஸ்ட் !!
கேரளாவில் தாய் மற்றும் தங்கையுடன் கள்ள நேட்டு அடித்த மலையாள நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மதிப்புழப்பு நடவடிக்கைக்குப் பின்னும் நாடு முழுவதும் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படுவதாக தகவல் பரவியது. குறிப்பாக கேரளாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, கள்ள நோட்டு அடிக்கும் மற்றும் மாற்றும் கும்பலை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் முடுக்கிவிடப்பட்டனர்..
இந்நிலையில் இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெயர் ரவீந்திரன், லியோ, கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் ஒரு பெரிய பையில் இரண்டரை லட்சம் ரூபாய் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்போது இந்த கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள டி.வி. நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ரகசியம் காத்த போலீசார், கொல்லத்தில் வசிக்கும் அந்த நடிகையின் சொகுசு பங்களாவை கண்காணிக்க தொடங்கினார்கள். அப்போது அந்த பங்களாவுக்கு சந்தேகப்படும் படியாக அடிக்கடி ஆட்கள் சென்று வருவது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து நேற்று அதிகாலை நேரத்தில் போலீஸ் படையினர் அந்த பங்களாவில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த பங்களாவில் வசித்த மலையாள டி.வி. நடிகை சூரியா அவரது தாயார் ரமா தேவி தங்கை சுருதி ஆகியோரை கைது செய்தனர்.
அவர்கள் கம்ப்யூட்டர், ஸ்கேனர் உள்பட நவீன கருவிகள் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 8 மாதங்களாக இந்த பங்களாவில் கள்ள நோட்டு அச்சடித்து அவர்கள் புழக்கத்தில் விட்டுள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது.