கடும் பனிமூட்டத்தால் 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து - 55 ரயில்கள் தாமதம்
கடும் பனி மூட்டம் காரணமாக வட இந்திய மாநிலங்களில் சுமார் 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 55 ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2 விரைவு ரயில்கள் 33 மற்றும் 28 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளன. மேலும், பனி மூட்டம் காரணமாக 400 மீட்டர் தூரத்துக்கும் குறைவாகவே பார்க்க முடிவதால் 23 விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முக்கிய ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்களுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில், விமானங்கள் எந்த இடையூறும் இல்லாமல் வழக்கம் போல புறப்பட்டுச் சென்றன.