ஸ்மிருதி இரானியை பாடாய் படுத்தும் கல்வித் தகுதி வழக்கு… ஆவணங்களை தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி…
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த வழக்கில், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தி சின்னத்திரை நாயகி ஸ்மிருதி இரானி, பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து மத்திய ஜவுளித் துறை அமைச்சராக நியமக்கப்பட்டார்.
கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலின்போது, அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் பி.ஏ. தேர்ச்சி பெற்றதாக தெரிவித்திருந்தார். மற்றொரு தேர்தலின்போது சமர்ப்பித்த ஆவணத்தில் பி.காம் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி இரானி பொய்யான தகவல்களை தந்துள்ளதாக, டெல்லியைச் சேர்ந்த அகமது கான் என்பவர், வழக்கு தொடர்ந்தார்.
ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த ஆதாரங்கள் ஏதும் தங்களிடம் இல்லை என, டெல்லி பல்கலைக்கழகமும் ,தேர்தல் கமிஷனும் தெரிவித்தன. ஆனால் இந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, அகமது கான், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றனம், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்த பின்தேவைப்பட்டால், ஆஜராகும்படி, ஸ்மிருதி இரானிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது..