இந்தியாவில் 4300ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. மாநில வாரியாக முழு விவரம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4348ஆக உள்ளது. 118 பேர் இந்தியாவில் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா இன்னும் சமூக தொற்றாக பரவாத நிலையிலும், பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. மகாராஷ்டிராவில் 781 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 571ஆக உள்ளது. இந்த இரு மாநிலங்களும் தான் மற்ற மாநிலங்களை விட கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
மகாராஷ்டிரா, தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக டெல்லியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 503ஆக உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாட்டை தொடர்ந்து டெல்லியும் 500ஐ கடந்துவிட்டது.
ஆரம்பத்தில் அசுரவேகத்தில் சென்றுகொண்டிருந்த கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது. கொரோனா நோயாளிகளை சிறப்பு வார்டுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதிக்கும் பணிகளையும் சுகாதாரத்துறை எடுத்துவருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் மேற்கொண்டுவருகின்றன.
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் 4348ஆக அதிகரித்துள்ளது. 118 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 300க்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மாநில வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விவரங்களை பார்ப்போம்.
மகாராஷ்டிரா - 781
தமிழ்நாடு - 571
டெல்லி - 503
கேரளா - 306
ராஜஸ்தான் - 274
தெலுங்கானா - 378
உத்தர பிரதேசம் - 276
ஆந்திரா - 226
கர்நாடகா - 163
மத்திய பிரதேசம் - 215
ஜம்மு காஷ்மீர் - 106
ஹரியானா - 76
அசாம் - 25
மேற்கு வங்கம் - 80
கோவா- 7
உத்தரகண்ட் - 27
பீஹார் - 32
புதுச்சேரி - 6
ஹிமாச்சல பிரதேசம் - 15.