சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேரவு முடிவுகள் இன்று வெளியீடு - இணையதளத்தில் பார்க்க சிறப்பு வசதி
நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 4.60 லட்சம் மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். வினாத்தாள் கடினமாக இருந்தால் கருணை மதிப்பெண்களை சி.பி.எஸ்.இ. வழங்கி வருவது நடைமுறை.
அதன்படி இந்தாண்டு நடைபெற்ற தேர்வில் விலங்கியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால் அப்பாடத்திற்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. ஆனால் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சி.பி.எஸ்.இ) இம்முடிவுக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடியாக தடை விதித்தது.
இதனால் வேறு வழியின்றி கருணை மதிப்பெண் இன்றி முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணை மதிப்பெண் முறையை திடீரென ரத்து செய்யக் கூடாது என்று கூறி, மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணையால் தள்ளிப்போன சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.