பொம்மை துப்பாக்கி என்று நினைத்து நிஜ துப்பாக்கியால் தாயை சுட்ட சிறுமி...!
சிறுமி ஒருவர், தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது விளையாட்டு துப்பாக்கி என்று எண்ணி, அந்த நிஜ துப்பாக்கியைக் கொண்டு தனது அம்மாவை சுட்டுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அருகே ஹூக்ளியைச் சேர்ந்தவர் சிறுமி காகோலி ஜனா. தனது தோட்டத்தில் இருந்து நேற்று காலை துப்பாக்கி ஒன்றை கண்டெடுத்துள்ளார். அந்த துப்பாக்கி, விளையாட்டு துப்பாக்கி என்று எண்ணி, அதை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, துப்பாக்கி திடீரென வெடித்துள்ளது. இதில் சிறுமியின் தாய் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தோர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிசை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் துப்பாக்கியை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு, துப்பாக்கி எப்படி கிடைத்தது? வீட்டு தோட்டத்தில் நிஜ துப்பாக்கி வந்தது எப்படி? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தாயின் உடல்நிலை மோசமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.