பெற்றால்தான் பிள்ளையா...கைவிடப்பட்ட குழந்தைக்கு பாலூட்டி உயிர்கொடுத்த பெண் காவலர்...
உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்திருந்த அக்குழந்தைக்கு சங்கீதா பாலூட்டியது உயிரைக் காக்க உதவியது என அந்த மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் மருத்துவர் ரவீந்திரநாத் மேதி கூறினார். வாணி விலாஸ் மருத்துவமனைக்கும் சென்று சங்கீதா அப்பெண் குழந்தையை பார்த்தார்.
பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைக்கு தகுந்த நேரத்தில் பாலூட்டி உயிரைக் காத்த பெங்களூரு பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
நேற்று முன் தினம் காலை, பெங்களூருவில் உள்ள எலஹங்கா பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட பெண் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரிக்க, சங்கீதா ஹலிமணி எனும் காவலர் வந்தார். அவர் சென்றபோது அக்குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டிருந்தது. உடலில் சர்க்கரை குறைந்திருந்த அக்குழந்தைக்கு கடந்த 10 முதல் 12 மணிநேரம் வரை பாலூட்டப்பட்டிருக்கவில்லை என்று சங்கீதாவுக்கு தெரியவரவே உடனே அவர் டாக்டர்களின் அனுமதியைப்பெற்று பாலூட்டியிருக்கிறார்.
அக்குழந்தை புதனன்று காலை நடை பயிற்சிக்கு வந்தவர்களால், பெங்களூருவில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.
"கண்டெடுக்கப்பட்டபோது அக்குழந்தை மீது தூசு படிந்திருந்ததுடன், எறும்புகள் கடித்த காயங்களும் இருந்தன," என்றார் 25 வயதாகும் சங்கீதா.
அந்தக் குழந்தை கண்டெடுக்கப்பட்டதற்கு ஒரு நாள் முன்னர் பிறந்திருக்கலாம் என்றும், கடைசி 10 - 12 மணிநேரம் வரை பாலூட்டப்படவில்லை என்றும் எலஹங்கா அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அஸ்மா தபசும் கூறினார். பிறகு மேல் சிகிச்சைக்கு அக்குழந்தை வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உடலில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்திருந்த அக்குழந்தைக்கு சங்கீதா பாலூட்டியது உயிரைக் காக்க உதவியது என அந்த மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் மருத்துவர் ரவீந்திரநாத் மேதி கூறினார். வாணி விலாஸ் மருத்துவமனைக்கும் சென்று சங்கீதா அப்பெண் குழந்தையை பார்த்தார்.
அக்குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறும் சங்கீதா, தமக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதால் இக்குழந்தையை தம்மால் தத்தெடுக்க இயலாது என தமது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார்.