செக்ஸ் சாமியார் ராம் ரஹீம் வளர்ப்பு மகள் வீட்டில் அரியானா போலீசார் திடீர் சோதனை...!
பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் இருக்கும் செக்ஸ் சாமியார் ராம் ரஹீம் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பரீத் இன்சானின் டெல்லி வீடுகளில் நேற்று அரியானா போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
தேராசச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ரஹீமுக்கு எதிரான பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் அரியானா, பஞ்சாப்பில் நிகழ்ந்த வன்முறையை தூண்டிவிட்ட வழக்கில் ஹனிபிரீத் இன்சான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், அவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலி சாமியார் குர்மீத் சிங், தனது பெண் சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அரியானா, பஞ்சாப்பில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. இதில் 37 பேர் கொல்லப்பட்டனர், 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக 345 பேர் மீது அரியானா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் 43 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகள் பிரியங்கா தனேஜா என்ற ஹனிபிரீத் இன்சான், தேரா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஆதித்யா இன்சான், மூத்த தலைவர் பவான் இன்சான் ஆகியோருக்கு எதிராக பஞ்ச்குலா நீதிமன்றம் நேற்றுமுன்தினம் கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதையடுத்து, ஹனிபிரீத் இன்சானை கைது செய்ய போலீசார் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள தேரா சச்சா அமைப்புக்கு சொந்தமான வீடுகளில் அரியானா போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினர்.
இது குறித்து டெல்லி தென்கிழக்கு போலீஸ் டி.சி.பி. ரோமில் பானியா கூறுகையில், “ பஞ்ச்குலா போலீஸ் படையின் ஒரு பகுதியினர் கைதுவாரண்டுடன் நேற்று டெல்லி வந்தனர். கிரேக்டர் கைலாஷ் பகுதியில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தினர். ஆனால், அங்கு யாரும் பிடிபடவில்லை. கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 3 பேர் குறித்த யாரேனும் தகவல் அளித்தால் அவர்களுக்கு தகுந்த பரிசும், தகவல் அளிப்போர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளர்’’ என்றார்.