"ஒரே முறை மொத்த பணத்தையும் டெபாசிட் செய்துவிடுங்கள்" - அருண் ஜெட்லி யோசனை
வங்கிகளில், எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்யலாம் எனவும், தினமும் சென்று டிபாசிட் செய்தால் தான் விசாரணை நடத்தப்படும் ஆகவே ஒரே முறை மொத்தமாக டெபாசிட் செய்து விசாரணையில் இருந்து தப்புங்கள் என நிதி அமைச்சர் ஜெட்லி கூறியுள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பழைய ரூ.500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. இந்த நோட்டுகளை வங்கிகளில் வரும் 30ம் தேதி வரை டிபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தியில், ஒருவருடைய வங்கிக்கணக்கில் அதிகபட்சம், ரூ.5000 மட்டுமே செலுத்த முடியும். அதற்கு மேற்பட்ட தொகையை ஒருமுறை மட்டுமே செலுத்த முடியும்.
அதுவும், இதுவரை அந்த தொகையை செலுத்தாமல் இருந்ததற்கான காரணத்தை தெரிவித்த பின்னரே செலுத்த முடியும். அதை வங்கிகள் பதிவு செய்து, விசாரணை நடத்திய பின்னரே, அந்தத் தொகையானது, வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர், அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது. வங்கியில் மட்டுமே டிபாசிட் செய்ய முடியும்.
நபர் ஒருவர், ஒரே முறை மொத்த பணத்தையும் எடுத்து சென்று டிபாசிட் செய்ய சென்றால், அவரிடம் கேள்வி எதுவும் வராது. எனவே, பணத்தை ஒரே முறை டிபாசிட் செய்ய ரூ.5000 என்ற வரையறை பொருந்தாது. ஆனால், கொஞ்சம் பணத்துடன், ஒரே நபர் தினமும் சென்று டிபாசிட் செய்தால், அது சந்தேகத்தை ஏற்படுத்தும்.
அவர் பணம் எங்கிருந்து பெற்று வருகிறார் என்ற கேள்வி வருகிறது. இந்த நேரத்தில் அவர் மீது சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, யார் எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகளாக பணம் வைத்திருந்தாலும், அதனை உடனே சென்று டிபாசிட் செய்யுங்கள் என தெரிவித்தார்.