பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜரான அத்வானி, ஜோஷி , உமா பாரதி… நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி லக்னோ நீதிமன்றம் உத்தரவு..
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஆஜரான அத்வானி, ஜோஷி , உமா பாரதி… நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி லக்னோ நீதிமன்றம் உத்தரவு..
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்பட்டது..
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி, முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநில கவர்னருமான கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது ரேபரேலி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் இந்த வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோரை கடந்த 2001-ம் ஆண்டு அலகாபாத் ஐகோர்ட்டு விடுவித்தது.
இதை எதிர்த்து சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் , அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இவ்வழக்கு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லக்னோ கோர்ட்டில் எல்.கே.அத்வானி மத்திய அமைச்சர் உமா பாரதி, மற்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 12 பேர் இன்று ஆஜராகினர்.
இதையடுத்து அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.பின்னர் அத்வானி உள்ளிட்டோர் சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஆஜராக வந்த அத்வானியை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் சந்தித்துப் பேசினார்