சபரிமலைக்கு மாலை போட்ட மாணவன் பள்ளிக்கு வரத்தடை... அடித்து நொறுக்கிய ஐயப்ப பக்தர்கள்..!
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு வந்த மாணவனை பள்ளிக்கு வரத் தடை விதித்ததால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தெலங்கானா, புவனகிரி மாவட்டத்தில் உள்ள இந்தியன் மிஷனரி ஸ்கூல் என்ற பெயரில் கிறிஸ்தவ மதத்தினர் நடத்தும் பள்ளிக்கூடம் இயங்கிஒ வருகிறது. இங்கு 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரனித் ரெட்டி சபரிமலைக்கு செல்வதற்காக மாலை போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளார்.
சபரிமலைக்கு செல்வதற்காக மாலை போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என்று கூறிய பள்ளி நிர்வாகத்தினர் எத்தனை நாட்கள் மாலையுடன் இருக்க வேண்டும் என்று பிரனித் ரெட்டியிடம் விசாரித்தனர்.
41 நாட்கள் மாலை போட்டு விரதம் இருக்க வேண்டும், அதன்பின் சபரிமலைக்கு சென்று திரும்பிய பின் மாலையை கழட்டி விரதத்தை முடித்துக் கொள்வேன் என்று மாணவன் பிரனித் ரெட்டி கூறியுள்ளார். எனவே மாணவன் பிரனித் ரெட்டியை 41 நாட்கள் பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என்று பள்ளி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் அங்கு சென்று போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்த மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பற்றி அறிந்து சுமார் 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பள்ளி முன் திரண்டு பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
ஐயப்ப பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியவாறு பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் மாணவனை வகுப்பில் அனுமதிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.