- Home
- Gallery
- கோலிவுட்டின் கேப்டன்... அரசியலில் கருப்பு எம்ஜிஆர் - சோதனைகளை கடந்து விஜயகாந்த் சாதனை நாயகனாக உருவெடுத்த கதை!
கோலிவுட்டின் கேப்டன்... அரசியலில் கருப்பு எம்ஜிஆர் - சோதனைகளை கடந்து விஜயகாந்த் சாதனை நாயகனாக உருவெடுத்த கதை!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று மரணமடைந்த நிலையில், அவரின் அரசியல் மற்றும் சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விஜயகாந்த் எனும் விஜயராஜ் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள ராமானுஜபுரம் எனும் சிற்றூரில் பிறந்தார். தன் பள்ளிப்படிப்பை தேவக்கோட்டையில் உள்ள பள்ளியில் பயின்ற இவர், பின் சிறுவயதிலேயே மதுரைக்கு இடம்பெயர்ந்து வளர்ந்து வந்தார். பின்னர் தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கி வந்த அரிசி ஆலையில், தன்னுடைய இளமைப் பருவத்தில் சிறுசிறு பணிகளை செய்து வந்தார். இவர் தமிழ் சினிமாவுக்கு வரும் முன்னர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற பொருளாளராக இருந்து வந்தார். இவரை முதன்முதலில் பார்த்த ரஜினிகாந்த், பார்ப்பதற்கு என்னை போலவே இருக்கிறாய் என கூறியதும், விஜயகாந்துக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்துள்ளது.
இந்த ஆர்வம் தான் விஜயராஜை விஜயகாந்த் ஆக மாற்றி சென்னையின் வாசலுக்கு தன் நண்பனான இப்ராஹிம் ராவுத்தர் உடன் வரவழைத்தது. பின்னர் தன்னுடைய தொடர் முயற்சி காரணமாக 1978-ம் ஆண்டில் இருந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய விஜயகாந்த், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பு, வித்தியாசமான ஆக்ஷன், நேர்த்தியான வசன உச்சரிப்பு என இவர் செய்த அனைத்தும் இவரை சினிமாவில் வெகு விரைவாக முன்னணிக்கு கொண்டு சென்றது.
பெரிய இயக்குனர், இளம் இயக்குனர் என பாகுபாடு பார்க்காமல் நடித்தவர் தான் விஜயகாந்த். இவர் நடித்த படங்களில் பெரும்பாலானவற்றில் காவல்துறை அதிகாரியாகவே நடித்திருந்தார். இதன்காரணமாகவே இவர் தமிழ் சினிமா ரசிகர்களால் கேப்டன் என்கிற செல்லப்பெயருடன் வலம் வருகிறார் விஜயகாந்த். அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர் மன்றத்தை கொண்டிருந்த நடிகர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் தமிழில் மொத்தம் 156 படங்களில் நடித்திருக்கிறார். மக்களால் புரட்சிக் கலைஞர் கேப்டன் என அன்புடன் அழைக்கப்படும் இவர் நடித்த 100வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன், இன்றுவரை இவர் நடித்த படங்களில் அனைவருக்கும் பிடித்த படமாக இருந்து வருகிறது. இனிக்கும் இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், பின்னர் நடித்த நீரோட்டம், அகல் விளக்கு ஆகிய படங்கள் இவருக்கு நற்பெயரை வாங்கி கொடுத்தன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சட்டம் ஒரு இருட்டறை படம் இவரது நடிப்பில் வேறொரு பரிணாமத்தை காட்டியது. பிறகு நடித்த அனைத்து படங்களுமே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. எந்த ஒரு கலைஞனும் அடித்தட்டு மக்களை கவர்ந்துவிட்டால் அவரது புகழ் காலகாலத்துக்கும் கொண்டாடப்படும். அப்படி ஒரு புகழைக் கொண்ட நடிகர் தான் விஜயகாந்த். சட்டம் ஒரு இருட்டறை, தீர்ப்பு என் கையில், இது எங்க பூமி, வைதேகி காத்திருந்தாள், நானே ராஜா நானே மந்திரி, அம்மன் கோவில் கிழக்காலே, சத்ரியன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் என இவர் நடித்த 150-க்கும் மேற்பட்ட படங்களில் பெரும்பாலானவை ஹிட் படங்கள் தான்.
ஒரு நடிகன் காதல் நாயகனாக, அதிரடி நாயகனாக, கிராமத்து நாயகனாக என ஒவ்வொரு முகத்தை கொண்டிருந்த வேலையில் அத்தனை முகத்தையும் ஒருங்கே கொண்டிருந்தவர் தான் விஜயகாந்த். சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் கிராமத்து மக்களை கவர்ந்த இவர், சேதுபதி ஐபிஎஸ் ஆக நகரத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்தார். அப்படி பலதரப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து புகழ்பெற்றவர் தான் விஜயகாந்த். இவரின் படங்களை எந்த அளவுக்கு மக்கள் ரசித்தார்களோ அதே போலதான் இவர் நடித்த படங்களில் இடம்பெறும் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடப்பட்டன.
பாடல்கள் மட்டுமின்றி இவரது படங்களில் இவர் எகிறி எகிறி அடிக்கும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களால் விசிலடித்து கொண்டாடப்பட்டன. அதோடு சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் டூப் போடாமல் நடிக்கவே விரும்புவார் விஜயகாந்த். இந்த காலகட்டத்தில் டாம் குரூஸ் ஹெலிகாப்டரில் தொங்கியபடி சாகசம் செய்வதை வாயைபிழந்து பார்க்கும் பலருக்கும், அந்த சாகசங்களையெல்லாம் விஜயகாந்த் 30 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் படங்களில் செய்து ஒரு டிரெண்ட் செட்டராக திகழ்ந்தார் விஜயகாந்த்.
சினிமாவில் இவர் அடிக்கும் அடி ஒவ்வொன்றும் இடி போல் பளார் பளார் ரகம். வில்லன்களுக்கு முன்பாக இவர் பேசும் ஆக்ரோஷமான வசனமாக இருக்கட்டும், அவர்களை அடித்து துவம்சம் செய்யும் இவரது ஆக்ஷன் ஆகட்டும், அதிரடி என்பதற்கு பெயர்போன நடிகராக இருந்து வந்தவர் தான் விஜயகாந்த். எதிரிகளை ஏய் என அதட்டுவது தொடங்கி, புள்ளிவிவரங்களை புட்டு புட்டு வைப்பது வரை இவர் செய்வது அனைத்தும் வேறலெவலில் ரீச் ஆனது.
விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்லாது ரியல் லைஃபிலும் ஒரு ஹீரோவாகவே இருந்து வந்தார். தான் சம்பாதித்த பணத்தை தனக்காக வைத்துக் கொள்ளாமல் தன்னால் முடிந்தவரை பிறருக்காக உதவி செய்து, கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை பெற்றவர் தான் விஜயகாந்த். ஆயிரம் கைகள் மறைந்தாலும் ஆதவன் மறைவதில்லை என்கிற கூற்று இவரது திரை வாழ்வில் மறுக்க முடியாத ஒன்று. அரசியல், சினிமா, மக்கள் சேவை என தன்னை ஒரு தன்னிகரற்ற தலைவனாக, மக்களோடு மக்களாக தனக்கான ஒரு தனி இடத்தை பெற்று, இன்றைய தலைமுறையினரிடமும் தன்னைப்பற்றி பேச வைத்த ஒரே நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் எத்தனை நடிகர்கள் வந்து போனாலும், இவரது பேச்சிற்கும், இவரது நடிப்பிற்கும், இவரது கண் அசைவிற்கும் இவர் பேசும் வீர வசனங்களுக்கும், எதிரிகளை துவம்சம் செய்யும் கரங்களையும் கொண்ட விஜயகாந்த் எனும் காந்த சக்தியை முறியடிக்கும் ஒரு சக்தி இன்னும் வரவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை. மிஸ் யூ கேப்டன்.
இதையும் படியுங்கள்... Captain vijayakanth: கேப்டன் விஜயகாந்த் மறைவு! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கண்ணீரில் தேமுதிக தொண்டர்கள்.!