- Home
- Gallery
- 3 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து தப்புவாரா பொன்முடி? விசாரணைக்கு நாள் குறித்த உச்சநீதிமன்றம்.!
3 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து தப்புவாரா பொன்முடி? விசாரணைக்கு நாள் குறித்த உச்சநீதிமன்றம்.!
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ponmudi
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ1,72,63,468 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
Chennai High Court
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி இருவரையும் 2016ஆம் ஆண்டு விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
Ponmudi case appeal
அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும், பொன்முடி, அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டது. இதனால், சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் பொன்முடி இழந்துள்ளார்.
Supreme court
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உத்தேச பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பொன்முடி வழக்கை எந்த அமர்வு விசாரக்கும் என்பது விரைவில் தெரியவரும். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.