சாவுக்கு லீவு வேணுமா ? செத்த உடலுடன் செல்பி எடுத்து அனுப்புங்க !! அதிகாரியின் அடாவடி உத்தரவு !!
சாவுக்கு போக விடுமுறை வேண்டும் என்றால், சடலத்துடன் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும் என டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழக டிப்போ ஒன்றில் மேலாளராக இருப்பவர் பிரசாந்த். இவர் போக்குவரத்து தொழிலளர்களிடம் அத்துமீறியும், அடாவடியாகவும் நடந்து வந்துள்ளார்.
இது குறித்து சில நாட்களுக்கு முன் பிரசாந்த் மீது பெண் நடத்துனர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் அவர் போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுத்த தொல்லைகள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான ஒன்று கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களின் உறவினர்கள் யாராவது இறந்து விட்டால், அதில் கலந்து கொள்ள டிப்போ மேலாளரிடம் விடுமுறை கேட்பது வழக்கம். ஆனால், அவர்கள் சொல்வதை பிரசாந்த் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டார்.
மாறாக விடுமுறை கேட்பவர்களிடம் சடலத்துடன் செல்பி எடுத்து அனுப்பினால் மட்டுமே அனுமதி அளித்து வந்ததாகவும், செல்பி எடுக்காதவர்களுக்கு ஆப்சென்ட் போட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
சில கண்டக்டர், டிரைவர்கள் சாவு வீட்டில் செல்பி எடுத்தால் உறவினர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்து ஆப்சென்ட் போட்டால் போடட்டும் என இருந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. டிப்போ மேலாளரின் இந்த கொடுமையான செயல்களை கண்டக்டர், டிரைவர்கள் கூறியது விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து தான் அவர் இட மாற்றம் செய்யப்பட்டதுடன் உயர் அதிகாரிகள் பிரசாந்த்தை எச்சரித்தனர்