தலையில் கல்லைப்போட்டு +2 மாணவர் கொடூரக்கொலை..! மர்மக்கும்பல் வெறிச்செயல்..!
பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே இருக்கிறது ஏர்வாடி காமாட்சிக்காடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் வெங்கடேசன்(17). அங்கிருக்கும் ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருக்கும் ஒரு ஏரியில் வெங்கடேசன் பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
தலையில் கல்லைப்போட்டு கொடூரமான முறையில் மாணவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். முகம் முற்றிலும் சிதைந்து போயிருந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவலர்கள் கொண்டு சென்றனர். மாணவனின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த வெங்கடேசனின் பெற்றோரும் உறவினர்களும் மாணவனின் உடலைக்கண்டு கதறி துடித்தனர்.
கொலை சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மாணவன் வீட்டில் இருந்து எப்போது வெளியில் சென்றார்? கடைசியாக யாரிடம் பேசினார்? முன்விரோதம் ஏதும் இருந்துள்ளதா? என்கிற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் குடியிருப்பவர்களிடமும் விசாரணை நடக்கிறது. பள்ளி மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.