குடும்பப்பெண்களை பாலியல் தொழிலுக்கு மாற்றிய வறுமை... மதுரையில் புரோக்கர்களுக்கு வசதியாகிப்போன கொரோனா..!
அதுவும் மதுரையில்... வருமானம் இன்றி தவித்து வந்த குடும்பப் பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது ஒரு கும்பல்.
கொரோனா பெருந்தொற்று குடிசை தொழில் செய்வோர் முதல் கோமகன்கள் வரை அனைவரையும் சுழற்றிப்போட்டுவிட்டது. பெரும்பாலான மக்கள் வருமானமின்றித் தவித்து வருகின்றனர். இப்படி தவிப்பவர்களை தடம்மாறச் செய்து ஒரு கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வாழ்வையே திசை மாறச் செய்துள்ளது. அதுவும் மதுரையில்... வருமானம் இன்றி தவித்து வந்த குடும்பப் பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது ஒரு கும்பல். இந்தத் தகவல் ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் ஹேமமாலா காதுக்கு எட்டியுள்ளது.
இதையடுத்து வடக்குமாசி வீதியை சேர்ந்த புரோக்கர் பாண்டியராஜாவிடம் வாடிக்கையாளர் போல் பேசியுள்ளனர் போலீஸார். அப்போது அந்த புரோக்கர் தெப்பக்குளம் அடுத்த குருவிக்காரன் சாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வரச் சொல்லி இருக்கிறார். அதன்படி போலீசாரும் அங்கு சென்று பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்துள்ளனர். புரோக்கர் பாண்டியராஜா, சத்துணவு பணியாளர் குணசேகரன் மற்றும் 2 பெண்களை தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.
செல்லுார், தபால்தந்தி நகர், அவனியாபுரம், வில்லாபுரம் என பல்வேறு பகுதியிலும் வறுமையில் இருக்கும் குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களிடம் முதலில் கடனாக சுமார் 5,000 ரூபாய் வரை கொடுத்து, பின்னர் அந்த கடனை அடைக்கும் பொருட்டு அவர்களை மூலச்சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளியுள்ளனர். இந்தத்தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டுவரும் பெண்கள் மூலம் புதிதாக, சில குடும்ப பெண்களையும் மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் தள்ளியுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புரோக்கர்களாக செயல்பட்ட மதிச்சியம் குணசேகரன், பாண்டியராஜா ஆகியோர் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில், தம்பதிகள் போல் நடித்து வாடகைக்கு வீடு எடுத்து இத்தொழிலை செய்து வந்துள்ளனர். இதில் இடைத்தரகராக செயல்பட்ட பாண்டியராஜா மீது ஏற்கனவே அண்ணாநகர் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.