துண்டு, துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட துணை நடிகையின் உடல்... 76 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் இன்று ஒப்படைப்பு..!
சென்னையில் கொலை செய்யப்பட்டு, கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட சினிமா இயக்குநரின் மனைவி சந்தியாவின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
சென்னையில் கொலை செய்யப்பட்டு, கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட சினிமா இயக்குநரின் மனைவி சந்தியாவின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
சென்னையை அடுத்த பெருங்குடியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கடந்த 21-ம் தேதி கோடம்பாக்கம் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் லாரியில் கொண்டு வந்து இங்கு கொட்டப்பட்டது. அப்போது குப்பையில் வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணின் கை மற்றும் கால்களை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?, அவரது உடலின் பிற உறுப்புகள் எங்கே? என தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் பல்வேறுகட்ட விசாரணையில், 16 நாட்களுக்கு பிறகு கொலை செய்யப்பட்ட அந்த பெண், சினிமா துணை நடிகையான நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியா(வயது 37) என்பதும், அவரது கணவரான தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் (51) என்பவர்தான் அவரை கொலை செய்து, உடலை துண்டு, துண்டாக வெட்டி, வீசியதும் தெரிந்தது.
இதனையடுத்து சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்த பாலகிருஷ்ணனை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, முதலில் தனக்கும், மனைவிக்கும் சம்பந்தம் இல்லை. விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் என்றார். பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து இருந்ததும், சந்தியா, சினிமாவில் நடிக்கும் ஆசையில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரங்களில் வெளியே சுற்றினார். அதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் சுத்தியலால் தாக்கி கொலை செய்ததக கூறினார்.
கொலை செய்த பின்னர் சந்தியாவின் உடலை கொடூரமாக துண்டு துண்டாக வெட்டி, 4 பார்சல்களாக கட்டி வெவ்வேறு இடங்களில் வீசி உள்ளார். பெருங்குடி குப்பை கிடங்கில் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டது. அது தவிர இடுப்பு முதல் தொடை வரையிலான பாகங்கள் அடங்கிய பார்சல் ஜாபர்கான்பேட்டை பாலத்தின் கீழே இருந்து போலீசார் மீட்டனர். ஆனால் மீதம் உள்ள தலை மற்றும் இடது கை, உடல் பாகங்கள் அடங்கிய 2 பார்சல்களை தேடும் பணியில் கிட்டதட்ட ஒரு வாரமாக தேடி வந்தனர். இதுவரை அவரது தலை, உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. போலீசார் கைப்பற்ற உடல் பாகங்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
தலை மற்றும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டாமல் ஒட்டுமொத்தமாக உடற்கூறு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என ஏற்கனவே காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கிடைத்த உடல்பாகங்கள் மட்டும் உடற்கூறு செய்த பின்னர் சந்தியாவின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உள்ளனர்.